புலமைப்பரிசில் பரீட்சையை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவியொருவர் கடத்தப்பட்டு காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டு சென்றுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து தனது நண்பர்களுடன் சிறிய லொறியில் அமுனுகம சந்திக்கு மாணவியொருவர் சென்றுள்ளார்.
குறித்த மாணவி அமுனுகமவில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து வீட்டின் அருகே சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி வீட்டை பார்த்ததும் வேறு திசையில் வாகனத்தை திருப்பி மாணவிக்கு பாடசாலை உபகரணங்களை வாங்கி தருவதாகக் கூறி அம்பன்பொல, எஹதுவே வீதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதன்போது பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த மற்றுமொரு மாணவனை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் குறித்த மாணவியை காட்டு பகுதிக்கு அழைத்துச்சென்று இறக்கி விட்டு தப்பியோடியுள்ளார்.
இதனை அவதானித்த பாடசாலை மாணவர் மற்றும் வீதியில் பயணித்த இருவர் சிறுமியை கண்டு விசாரித்து, கிராம மக்களின் உதவியுடன் சிறுமியின் தந்தையை அவ்விடத்திற்கு வரவழைத்து சிறுமியை ஒப்படைத்துள்ளனர்.