சாவகச்சேரியில் வாகனத்தில் வந்த சிலரால் வீடு புகுந்து இளம் பெண்ணும், குழந்தையும் தூக்கிச் செல்லப்பட்ட விவகாரம் கடத்தல் அல்லவென்பது தெரிய வந்துள்ளது.
கனடாவிலுள்ள கணவனை கைவிட்டு, வவுனியாவிலுள்ள காதலனுடன் வாழ்வதற்கு அந்த பெண் சென்றுள்ளார்.
சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள வீடொன்றிற்குள் நேற்று முன்தினம் காலையில் இந்த கடத்தல் நடந்தது.
வாகனமொன்றில் வந்த நான்கு பேர் வீடொன்றிற்குள் நுழைந்து, 31 வயதான இளம் குடும்பப் பெண்ணை தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். 3 வயது குழந்தையும் வாகனத்தில் ஏற்றப்பட்டது.
அந்த சமயத்தில் வீட்டில் திருத்தப்பணிகளிற்காக தென்னிலங்கையை சேர்ந்த சிலரும் நின்றிருந்தனர்.
வாகனத்தில் ஏற்றப்பட்ட போது, இளம் குடும்பப்பெண் எதிர்ப்பு தெரிவித்திருக்கவில்லை.
உடனடியாக செயற்பட்ட குடும்பத்தினர், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர். பொலிசார் அந்த பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தினர். தான் காதலனுடன் விரும்பியே செல்வதாக அந்தப் பெண் பதிலளித்தார்.
அந்த ஜோடியை பொலிஸ் நிலையம் வருமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட இளம் குடும்பப் பெண், வவுனியாவில் தங்கியிருந்ததாகவும், அங்கு திருமணத்திற்கு புறம்பான உறவு ஏற்பட்டதாகவும், இதையடுத்து, கடந்த வாரமே அந்த பெண்ணை குடும்பத்தினர் சாவகச்சேரிக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, காதலன் தரப்பினர் வவுனியாவிலிருந்து வந்து சாவகச்சேரியில் காதலியை கடத்திச் சென்றுள்ளார்.