குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கணவன் மீண்டும் குடும்பத்துடன் சேர்வதற்காக மனைவியில் உடலில் வசிய எண்ணெயை பூச வேண்டும் எனக் கூறி, ஆலயம் ஒன்றுக்கு வரழைக்கப்பட்ட பெண்ணொருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் போலி மந்திரவாதியை ஹோமாகமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹோமாகமை தீபங்கொட பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் தீபங்கொட பிரதேசத்தில் ஆலயம் ஒன்றை நடத்தி வருவதுடன் வசிய மாந்திரீகம் மூலம் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கணவன், மனைவி, பிள்ளைகளை ஒன்று சேர்த்து வைப்பதாக பிரசாரம் செய்து வந்துள்ளார்.
இதனடிப்படையில் ஹோமாகமை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வரும் காலியை சேர்ந்த 44 வயதான பெண் அண்மையில் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கணவனை மீண்டும் வரவழைப்பதற்காக வசிய மாந்திரீகம் செய்ய ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
முதல் நாள் சாமியடி அருள்வாக்கு கூறியுள்ள சந்தேக நபர், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கணவனை வரவழைக்க வேண்டுமாயின் மனைவியின் உடலில் வசிய எண்ணெயை பூசி, மந்திரம் ஓத வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அந்த பெண் வசிய எண்ணெயை பூசிக்கொள்வதற்காக மற்றுமொரு நாளில் ஆலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது சந்தேக நபர் ஆலயத்திற்கு அதிகளவில் சாம்பூராணி புகையை போட்டு ஆலயம் முழுவதும் பரவ செய்து, பெண்ணின் உடலில் பல இடங்களில் எண்ணெயை பூசுவது போல் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பெண் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து, சந்தேக நபர் வேறு நபர்களுடன் இணைந்து பெண்ணை ஆலயத்திற்குள்ளேயே கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
அத்துடன் சந்தேக நபர் பெண்ணை கடித்து உடலில் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பெண் ஹோமாகமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து ஆலயத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதுடன் அவரது மனைவி இரண்டு வருடங்களுக்கு அவரை பிரிந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள போலி மந்திரவாதி ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.